Tamil Quotes

Abdul Kalam History Tamil – மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

abdul kalam tamil

தெருவோரத்தில் செய்தித்தாள் விற்ற சிறுவன் பின்னாளில் தன் உழைப்பால் இந்திய நாட்டின் முதல் குடிமகனாய் உயர்ந்து தேசமே பெருமை கொள்ளும் அளவுக்கு பல சாதனைகள் படைத்த ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம் – Abdul Kalam History Tamil.

பிறப்பு மற்றும் இளமை பருவம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் நாள் ஜெயினுலாபுதீன்-ஆயிஷா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இவர் ராமேஸ்வரத்திலுள்ள தொடக்க பள்ளியில் தனது பள்ளி படிப்பை தொடங்கினார். வறுமை காரணமாக பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் செய்தித்தாள் விநியோகம் செய்து வந்தார்.

சிறு வயது முதலே விமானங்கள் மீதும் விண்வெளி மீதும் அதிக ஆர்வம் கொண்டிருந்த கலாம் தன் தந்தையிடம் பறவைகள் பறக்கும் விதம் குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பார்.

பள்ளி படிப்பை முடித்த பிறகு திருச்சியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பிரிவில் பட்டப்படிப்பை தொடர்ந்தார். 1954-ஆம் ஆண்டு இயற்பியல் இளங்கலை பட்டம் பெற்ற இவர் பிறகு சென்னை எம்.ஐ.டி-யில் விண்வெளி பொறியியல் பயின்றார்.

முதல் தோல்வி:

கல்லூரி படிப்பை முடித்த பிறகு இந்திய விமானப்படையில் தன் கனவு பணியான விமானி பணிக்காக விண்ணப்பித்தார். நேர்முக தேர்வில் கடைசி ஆளாய் தேர்வான போதும் இடம் கிடைக்காமல் வெளியேற்றப்பட்டார். வெற்றியை போலவே தோல்வியையும் நேசிக்கும் குணம் கொண்ட கலாம் தொடர் முயற்சி மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில்(ISRO) பணியில் சேர்ந்தார். இவர் சேர்ந்த காலகட்டத்தில் இந்தியா விண்வெளி ஆராச்சியில் பிள்ளையார் சுழி கூட போட்டிருக்கவில்லை. பூஜ்யத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டிய நெருக்கடி. சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்திய அரசு விண்வெளி ஆராய்ச்சி பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

இஸ்ரோ-வில் அப்துல் கலாம்:

அப்துல் கலாம் தன் சுய சரிதை நூலான அக்னி சிறகுகள் புத்தகத்தில் அதிகம் பயன்படுத்திய இரு பெயர்கள் விக்ரம் சாராபாய் மற்றும் சதிஷ் தவான். அப்துல் கலாம் இவர்கள் இருவருடனும் இணைந்து பல காலம் பணியாற்றியுள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் ராக்கெட் பாகங்களை மாட்டு வண்டியிலும் சைக்கிளிலும் வைத்து எடுத்து செல்லும் அளவுக்கு இஸ்ரோ நிதி நெருக்கடியில் தத்தளித்தது. தன்னுடன் கல்லூரியில் பயின்ற பலர் தனியார் நிறுவனங்களிலும் வெளிநாடுகளிலும் அதிக சம்பளத்திற்கு வேலை செய்த போதும் விண்வெளி ஆராய்ச்சியின் மீதும் இந்திய தேசத்தின் மீதும் கொண்ட அளவில்லாத பற்றால் தொடர்ந்து இஸ்ரோவில் பணியாற்றினார்.

ஒரு முறை பயிற்சிக்காக அமெரிக்காவிலுள்ள நாசா சென்ற கலாம் அங்கு வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் படத்தை கண்டு ஆச்சர்யமடைந்தார். இந்திய மன்னர்களில் ஒருவரான திப்பு சுல்தான் 1700-களிலேயே போர்களில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருந்தார். தன் சொந்த தேசத்து மக்களால் மறக்கப்பட்ட ஒருவன் உலகின் மற்றொரு மூலையில் கொண்டாடப்படுவது ஆச்சர்யமாக உள்ளது என்றார்.

இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :

அப்துல் கலாம் பேச்சு போட்டி, அப்துல் கலாம் பற்றிய கட்டுரைகள், அப்துல் கலாம் சாதனைகள் கட்டுரை, அப்துல் கலாம் கட்டுரைகள், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு தமிழ், நான் விரும்பும் தலைவர் பேச்சு போட்டி, நான் விரும்பும் தேசத் தலைவர் கட்டுரை, தேசிய தலைவர்கள் கட்டுரை, நான் விரும்பும் தலைவர் பற்றி கட்டுரை, abdul kalam history in tamil, a p j abdul kalam history in tamil, a.p.j abdul kalam history in tamil, a.p.j.abdul kalam history in tamil, apj abdul kalam history in tamil, a p j abdul kalam tamil speech, apj abdul kalam tamil speech

இந்தியாவின் முதல் ராக்கெட்:

கலாம் , இஸ்ரோவின் துணைக்கோள் ஏவு வாகன(SLV) திட்ட இயக்குனராக பணிபுரிந்த போது ஏவப்பட்ட ராக்கெட் கடலில் விழுந்து திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்திய பத்திரிகைகள் பல கேலி சித்திரம் வரைந்து கிண்டல் செய்தது. விரக்தியின் உச்சத்தில் இருந்த கலாம் அறையை விட்டு வெளியே வராமல் இருந்தார். அந்த நேரத்தில் வந்த இஸ்ரோ தலைவர் சதிஷ் தாவன் நான் சென்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறேன் நீ ஓய்வெடு என்று கூறி கலாமை ஓய்வெடுக்க செய்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்திய பொருளாதாரம் தத்தளித்து கொண்டிருக்கையில் இதனை கோடி ரூபாயை கடலில் வீசிவிட்டீர்களே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதும் பொறுமையுடன் சரியாக இன்னும் ஓராண்டு காலத்திற்குள் இந்தியா விண்வெளியில் கால் பாதிக்கும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு கலாமை சந்தித்து தான் அளித்த வாக்குறுதியை சொல்லி நம்பிக்கையூட்டினார்.

கலாம் குழு இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்க தொடங்கியது. அடுத்த ஆண்டே கரும் புகையை கக்கிக்கொண்டு விண்ணில் சீறி பாய்ந்தது SLV ராக்கெட். நாடெங்கிலும் கொண்டாட்டம் கலைகட்டியது. மீண்டும் கலாமை சந்தித்த சதிஷ் தாவன் இந்த முறை நீ சென்று பத்திரிகையாளர் சந்திப்பை நடந்து என்றார். மெய்  சிலிர்த்து போன கலாம் பின்னாளில் பல இடங்களில் பேசும் பொது சதிஷ் தாவணனின் இந்த செயலை  சுட்டிக்காட்டி ஒரு நல்ல தலைவன் தோல்வி வரும் போது பிறரை குற்றம் சொல்லாமல் முன்னின்று ஏற்றுக்கொண்டும் வெற்றி வரும் போது அணியினரை ஏற்றுக்கொள்ள செய்து உற்சாகமூட்ட வேண்டும் என்பார்.

 SLV வெற்றியை தொடர்ந்து பல திட்டங்களில் பணியாற்றய கலாம் சதிஷ் தாவன் அறிவுறுத்தலின் பேரில் இஸ்ரோவில் இருந்து விலகி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தில்(DRDO) பணியாற்ற தொடங்கினார். அங்கு அவர் ஏவுகணை வடிவைமைப்பு திட்டத்தில் பணியாற்றினார். அதுவரை இந்தியாவிடம் உள்நாட்டு ஏவுகணை தொழில்நுட்பம் ஏதும் இருந்திருக்கவில்லை. ஆனால் கலாம் இஸ்ரோவில் சாதித்தது போன்றே இங்கும் பல சாதனைகள் புரிந்தார். அக்னி, ப்ரித்வி, நாக், திரிசூல் போன்றவை இவர் காலத்தில் தயாரிக்கப்பட்டவை . இந்தியாவை ஒரு ஏவுகணை நாடக மாற்றியதில் இவர் பங்கு அளப்பரியது.

பொக்ரான் அணு குண்டு சோதனை:

இந்தியா எப்போதும் அகிம்சையை விரும்பும் நாடு.ஆனாலும் மற்ற உலக நாடுகள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் போது நம்மிடம் அணு ஆயுதம் இல்லாததை ஒரு பலவீனமாக கருதிய கலாம் அடுத்த கட்டமாக அணு ஆயுத தயாரிப்பில் இறங்கினார். 1999-ஆம் ஆண்டு உலக நாடுகள் யாரும் எதிர் பார்க்காதவாறு ராஜஸ்தானிலுள்ள பொக்ரானில் அணு குண்டு சோதனையை நடத்தினார்.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணை தொழில்நுட்பம், மற்றும் அணு ஆயுதம் ஆகிய அனைத்திலும் கலாம் மிக முக்கிய பங்காற்றினார்.

மேதகு இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் :

2002-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் 11-ஆவது குடியரசு தலைவரானார். குடியரசு தலைவர் பதவியை ஆக்கபூர்வமாக பயன்படுத்த எண்ணிய கலாம் ஐந்தாண்டுகளுக்குள் ஒரு கோடி மாணவர்களை சந்திக்க வேண்டும் என்ற இலக்குடன் பயணித்தார். நாட்டின் மூளை முடுக்குகளுக்கெல்லாம் சென்று மாணவர்களை தேடி தேடி சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார். தேச வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்த கலாம் தன் பதவிக்காலத்தின் பெரும் நாட்களை மாணவர்களுடன் உரையாற்றுவதிலேயே கழித்தார். இந்திய குடியரசு தலைவர்களிலேயே மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் அப்துல் கலாம்.

பட்டங்கள் மற்றும் விருதுகள்:

கலாமின் சாதனைகளை பாராட்டும் விதமாக இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன்(1981), பத்ம விபூஷன்(1990), பாரத ரத்னா(1997) ஆகியவற்றை வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. இது மட்டும் அல்லாமல் பல உள்நாட்டு வெளிநாட்டு  பல்கலைகழகங்கள் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

காலம் அவர்கள் சுவிட்ஸர்லாந்து நாட்டிற்கு சென்ற தினமான மே 26-ஆம் தேதியை அறிவியல் தினமாக அறிவித்தது பெருமைப்படுத்தியது சுவிட்ஸர்லாந்து அரசு.

அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அப்துல் கலாம் சுய சரிதை நூலான அக்னி சிறகுகள் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையான நூல்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் போன்றவை அப்துல் கலாம் எழுதிய நூல்களாகும்.

இறப்பு:

2007-ஆம் ஆண்டில் குடியரசு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தனக்கு மிகவும் பிடித்த பணியான ஆசிரியர் பணியை தொடர்ந்தார். நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் கௌரவ பேராசிரியராக பணியாற்றினார். யாரும் எதிர் பார்க்காதவாறு 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரெனெ ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். தேசமே கண்ணீரில் மூழ்கியது.

“இந்தியாவின் தூண் சாய்ந்துவிட்டது என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதின”.

நாடு முழுவதும் படித்தவர் படிக்காதவர் கிராமம் நகரம் வேறுபாடின்றி தேசமே திரண்டு அஞ்சலி செலுத்தியது. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற இறுதி சடங்கு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் நேரில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.

தேசத்திற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஓர் உன்னத தலைவனுக்கு தேசமே திரண்டு அஞ்சலி செலுத்தியதால் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை மாறாக இந்திய மக்களின் நன்றி உணர்வே வெளிப்பட்டது…..

Exit mobile version